Freitag, 11. Oktober 2013

பூந்தி லட்டு

பூந்தி லட்டு

தேவையான பொருட்கள்:

கடலைமா - 3கப்
சீனி - 5கப்
டைமன் கற்கண்டு - சிறிதளவு
கயு - 20
ஏலக்காய் - 5
நெய் - 5 கரண்டி
தண்ணீர் - 8 கப்
அவித்த கோதுமை மா - 1/2 சுண்டு
உப்பு - சிறிதளவு
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
மஞ்சள் கலறிங் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவும் அளவான உப்பும் பேக்கிங்பவுடரும் சிறிது மஞ்சள் நிற கலறிங்கும் சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.


      அடுப்பில் தாச்சியை வைத்து நெய்யை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது நெய் தடவிய பின் நெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள நெய்யில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது நெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாக இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)


    தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.


     பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு நெய் வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.


      பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கயுவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் 5கப் சீனியை 8கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சீனிப்பாணி காச்சவும். பாணியை தண்ணீர்க்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.


     அத்துடன் கயு, ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு பூந்தியில் சேரும் வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்கும் போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். அவ்வாறு பிடிக்கும் போதே டைமன் கற்கண்டை போட்டுப் பிடித்து பரவலாக அடுக்கி அழகுபடுத்தி பரிமாறலாம்.


   பூந்தியை பொரிப்பதற்கு நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். கராம்பு அனேகமானவர்களுக்குப் பிடிக்கும். பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்பினையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.

Keine Kommentare:

Kommentar veröffentlichen