Dienstag, 3. Januar 2012


காரதிர, விண்ணதிர, அலைகள் பாடும்
கடலதிர, திசையெட்டும் அதிர இந்தப்
பாரதிர அறமுழக்கம் செய்தாய்! சற்றும்
படிக்காமல் தமிழினிலே என்ன உண்டென்-
பாரதிரத் தமிழ்முழக்கம் செய்தாய்! சாகாப்
பாரதியின் வரலாற்றை - ஆதிக் கத்தின்
வேரதிர அவன்வைத்த வேட்டுப் பாட்டை
விரித்துரைத்தாய்! கம்பனுக்கும் பெருமை சேர்த்தாய்!

தனக்காகக் கார்மேகம் பொழிவ தில்லை;
தனக்காகச் சோழநதி பாய்வ தில்லை;
தனக்காகப் பூங்குயில்கள் இசைப்ப தில்லை;
தனக்காகச் செவ்வாழை செழிப்ப தில்லை;
தனக்காக இயற்கையிலே முகிழ்த்த ஒன்றும்
தழைப்பதில்லை; பிழைப்பதில்லை; மனிதன் மட்டும்
தனக்காக வாழ்கின்றான் என்பர்; அந்தத்
தரையுரையைப் பொய்க்கவைத்த சான்றோன் நீயே!

Keine Kommentare:

Kommentar veröffentlichen